Saturday, February 12, 2011

இடம் - வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், மதுரை - காரைக்குடி வழித்தடம்

இந்த இடம் மதுரை - காரைக்குடி செல்லும் வழியில் உள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், மதுரையிலிருந்து ஐம்பது கி.மீ, S.S . கோட்டை தாண்டியவுடன், இவ்விடம் வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நண்பர்களுடன் சேர்ந்து பார்த்து வருகின்றோம். மதுரையில், பச்சைப் பசேல் என்று உள்ள கண்மாயை பார்ப்பது மிகக் கடினம், அதை இங்கே காணலாம். வேட்டங்குடி, இடம் பெயர்ந்து வரும் பறவைகளுக்கு புகலிடமாக உள்ளது.

பறவைகள் ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து வருகின்றன. செப்டம்பர் - ஜனவரி வரை பறவைகளைப் பார்க்கும் பருவம். உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை (Blue winged teal, Cattle egret, Painted stork, Eastern Grey heron, Glossy ibis, Darter or Snake bird, Spoonbill, Asian openbill stork) முதலிய 13 வகைகளுக்கு மேலான பறவைகளை இங்கு காணலாம்.


இந்த வருடம் பட்டாம் பூச்சி கூட்டங்கள் அதிகம் இருந்தன. ஏதோ, புது வகையான பூச்சி ஒன்றைப் பார்த்தோம்.


பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு, குஞ்சு பொறித்து சென்று விடும். சூரிய உதயத்தின் போதும், சூரிய மறைவின் போதும், பறவைகளைப் பார்ப்பதற்கு சரியான நேரம். பறவைகளை நன்கு பார்ப்பதற்கு, பைனாகுலர் ஒன்றும் வைத்துள்ளார்கள்.


இக்கிராமத்தினர், பறவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடும் என்பதால், மிக நீண்ட வருடங்களாக, தீப ஒளித் திருநாளின் போதும், எப்போதும் பட்டாசு வெடிப்பது இல்லை. சாதரணமாகவே, பட்டாசு வெடிப்பது, உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கும் . இது மிகவும் பாராட்டத்தக்க விடயம். பறவைகளைக் காண வரும் மக்கள், பறவைகளுக்கு இடையூறு வராத குறைந்தப் பட்ச நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்வதில்லை.

பறவைகள், இயற்கை சார்ந்த சூழல், யாரையும் ரசிக்க வைக்கும் இடம், வேட்டங்குடி.